அப்படி என்னதான் இருக்கிறது திருவண்ணாமலையில்? கிரிவலம் வருவது எதனால்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படித்தாலே போதும்.
படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் எழுந்தது.
அதற்குத் தீர்வு தர, சிவபெருமான் ஓர் ஒளிப் பிழம்பாக, விஸ்வரூபம் காட்டி விண்ணுக்கும் மண்ணுக்கும் பெரிதாய் நின்றார். அன்றைய தினம்தான் சிவராத்திரி.
“என்னுடைய பாதத்தையோ, சிரசையோ யார் முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர்.’’ என்றார் ஈசன்.
மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதம் காண பாதாளம் நோக்கிப் பாய்ந்தார்.
பிரம்மனோ, தலை காண, அன்னப் பறவையாய் ஆரவாரமாய்ப் பறந்தார்.
காலங்கள் கடந்தன. விஷ்ணுவால் இறைவனின் பாதத்தைக் காண முடியவில்லை.
ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான்தான் மிகப் பெரியவர் என்பதை உணர்ந்த விஷ்ணு, தன் பிழையை உணர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.
பிரம்மா மட்டும் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. யுகம் யுகமாய் சிவனின் தலையிலிருந்து விழுந்து கொண்டிருந்த ஒரு தாழம்பூவின் உதவியுடன், ‘நான் சிவனின் தலையைக் கண்டுவிட்டேன்’ என்று பொய்யுரைத்தார்.
அப்புறம் என்ன? பொய் சொன்ன பிரம்மாவுக்கு பூவுலகில் பெரிதாய் வழிபாடு எங்கும் இல்லை. தாழம்பூவும் பூஜைக்குப் பயன்படாத மலர் ஆயிற்று.
நெருப்புத்தூணாக, பிரம்மாண்டமாக ஆரம்பமும் முடிவும் கண்டுபிடிக்க முடியாதவாறு பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் காட்சி தந்த இறைவன், பக்தர்களுக்கும் காட்சி தர வேண்டும் என்பதற்காக, குளிர்ந்து, தன் உருவத்தை உள்ளடக்கி, அருணாசலமாக, திருவண்ணாமலையாக மாறினார்.
எல்லாம் வல்ல சிவபெருமானே இந்தத் திருவண்ணாமலை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?
”சூரியனிடமிருந்து சந்திரன் ஒளி பெறுவது போல பூமியில் உள்ள எல்லாத் தலங்களும் இந்தத் திருவண்ணாமலையால் ஒளி பெறுகின்றன. திருவண்ணாமலைதான் ஓம்காரத்தின் உறைவிடம். ஒளி வெள்ளமாக நான் உரு எடுத்ததை பக்தர்களுக்கு நினைவூட்ட, கார்த்திகை தினத்தில் மலை உச்சியில் தீபமாகக் காட்சி தருவேன். இந்தத் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தருவேன்.’’ என்று ஆனந்தமாகக் கூறியிருக்கிறார் சிவபெருமான்.
காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.
எங்கோ திருச்சுழியில் பிறந்த பகவான், திருவண்ணாமலை நாடி வந்த மகத்துவம் புரிகிறதா உங்களுக்கு? அது மட்டும் அல்ல, மனம், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றும்தான் விஷ்ணு, பிரம்மா, சிவன் என்று உருவகப்படுத்தி உணர்ந்தால் வாழ்க்கையின் தத்துவம் புரிபடும்!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
SOURCE::::: http://www.balhanuman.wordpress.com
Natarajan
7 Jan 2015
