மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை – 28.

புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
பெரியவாள் முன்னிலையில், slide viewer –ல் ஸ்லைடுகளைப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது, ஸ்லைடில் உள்ள படங்களை நான்கு மடங்கு பெரிதாகக் காட்டும். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாள், “இதில் ஸ்லைடு வைக்குமிடத்தில் நெகடிவ் பிலிமைப் போட்டால், நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார்.
(பெரியவாளுக்குப் புகைப்படக் கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும். ஆனால், தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய அக்ஞானம் என்னை விட்டுப் போய்விடுமா என்ன?)
”நெகடிவ் போட்டால், திரைப்படத்தில், கறுப்பு வெள்ளையாகவும், வெள்ளை கறுப்பாகவும் தெரியும்..”
பெரியவாள் உடனே, “அதுதான் எனக்கு வேணும்.. நரைத்துப் போன என் தலைமுடி, கறுப்பாகத் தெரியும்! நான் இன்னும் இளைமையாக இருப்பேனோல்லியோ…”
அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அட்டகாசமாகச் சிரித்து மகிழ்ந்தார்கள்.
பெரியவாளுடைய நகைச்சுவை உணர்வு, எவரெஸ்டுக்கு மேலே பத்து அங்குலம்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
***********
வானகரத்தில் ஒரு சவுக்குத் தோப்பில் உட்கார்ந்திருந்தார் பெரியவா. முன்னர் எடுத்திருந்த புகைப்பட ஆல்பத்தைக் கொடுத்தேன். அப்போது, பல்வேறு காரணங்களால் புகைப்படங்களில் குறைகள் ஏற்பட்டிருந்தன.
இந்தத் தோப்பில் எவ்விதக் குறைகளுமில்லாமல் புகைப்படம் எடுக்க முடியும் என்பது என்னுடைய துணிபு.
பெரியவா, ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, ஒரு தாழங்குடை கொண்டுவரச் சொல்லி, அதைத் தன் தலைக்கு மேல் பிடிக்கச் சொன்னார்.
“இப்போ போட்டோ எடுத்துக்கோ…”
அப்போது நான் எடுத்த புகைப்படம் மிக அருமையாக வந்திருந்தது. (பின்னால் கல்கி தீபாவளி மலர் ஒன்றில் ஸ்ரீருத்ர வாக்கியமான, ‘நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச’ என்ற விளக்கத்துடன் முகப்புப் படமாக வெளியாயிற்று).
பெரியவாள் தாழங்குடையைப் பிடிக்கச் சொன்னதற்கும் காரணம் இருந்தது. மரங்கள் வழியே வந்த ஒளி, அவர்கள் மேல் திட்டுத் திட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் படம் எடுத்தால் நன்றாக வராது என்பதால், அந்த ஷாட் நன்றாக அமைய வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தார்கள்.
மெய்ப் படங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அவர்கள். நிழற் படங்களின் நுட்பங்களை எந்தக் குருகுலத்தில் கற்றுத் தெளிந்தார்கள்?
ஆயிரம் படம் படைத்த ஆதிசேஷ்னே அறிவார்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4494/maha-periyavaa-photographer/#ixzz2VFnPJvMb
